பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் – ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!

இந்தியா

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் – ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் – ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!

மும்பை: உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று(அக்.,9) இரவு 11.30 மணிக்கு காலமானார்.

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ரத்தன் டாடாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், ரத்தன் டாடா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. . தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்.09) இரவு, 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 1991 மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 டிச., 28ல் ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 1991ல் வெறும் 10,000 கோடி ரூபாய் இருந்த விற்றுமுதல், 2011 – 12ல், 100.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவருக்கு மத்திய அரசு, நாட்டின் உயரிய விருதுகளான, பத்ம பூஷன்(2000) மற்றும் பத்ம விபூஷன்(2008) விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

பிரதமர் மோடி இரங்கல் :- ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தனது பணிவு, இரக்கம், மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா. அருடைய இழப்பு பேரிழப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவும், டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “இந்திய தொழில்துறையின் தலைவரும், இந்தியாவின் பெருநிறுவன நிலப்பரப்பை வடிவமைத்த பத்ம விபூஷன் ரத்தன் டாடாவின் மறைவால், காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளது. அவரது நேர்மையும், கருணையும் வருங்கால சந்ததியினர், தொழில்முனைவோர் மற்றும் இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “ரத்தன் டாடாவின் மறைவால், தேசத்தைக் கட்டியெழுப்பும் கார்ப்பரேட் வளர்ச்சியை, நேர்மையுடன் சிறந்து விளங்கும் ஒரு சின்னத்தை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷண் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், சிறந்த டாடா-வின் மரபை முன்னெடுத்துச் சென்று, உலக அரங்கில் பிரம்மிக்க வைத்திருக்கிறார். அனுபவமிக்க தொழில் வல்லுநர்களையும், இளம் மாணவர்களையும் ஒரே மாதிரியாக ஊக்கப்படுத்தினார். அவரின் மக்கள் தொண்டு சேவை விலைமதிப்பற்றது” எனக் குறிப்பிட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பழம்பெரும் தொழிலதிபரும் உண்மையான தேசியவாதியுமான ரத்தன் டாடா மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். நம் நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். நான் அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், பாரதத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கான அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நமது நாடு மற்றும் அதன் மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு லட்சக்கணக்கான கனவுகளை மலர வழிவகுத்தது. ரத்தன் டாடாவை அவரது நேசத்துக்குரிய தேசத்திலிருந்து காலத்தால் பறிக்க முடியாது. அவர் நம் இதயங்களில் என்றும் வாழ்வார். டாடா குழுமத்திற்கும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் – மக்கள் சேவை ஆகிய இரண்டிலும் அழுத்தமான முத்திரை பதித்துள்ளார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது மறைவுக்கு, கட்சி தலைவர்களும், மாநில முதல்வர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜார்கண்ட் அரசு, ஒருநாள் துக்கம் அனுசரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Leave your comments here...