மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு .. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு .. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம்  புறக்கணிப்பு ..  நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில், அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதை புறக்கணிக்கப் போகிறேன்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஏற்கெனவே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை ஒட்டி, ஒரு நீண்ட அறிக்கை கொடுத்திருக்கிறேன். அதையொட்டி, ஒரு முக்கிய முடிவை நான் எடுத்திருக்கிறேன். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற நிதிநிலை அறிக்கை மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

மூன்றாவது முறையாக வாக்களித்த மக்களுக்கு இந்த பாஜக கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்யத் தயாராக இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கை தெளிவாக காண்பிக்கிறது. நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு என்று என்னென்ன திட்டங்கள் அறிவிக்கவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் ட்விட்டரில் வெளியிட்டிருந்தேன். பல கோரிக்கைகளை அதில் எடுத்து வைத்தேன். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும். கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைத் திட்டத்துக்கான ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்திருந்தேன்.

அந்தக் கோரிக்கைகளில் எதையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒரு சில மாநிலக் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்துள்ளார். அறிவித்துள்ளார்களே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் சந்தேகம்தான்.

எப்படி தமிழகத்துக்கு மெட்ரோ ரயில் என்று அறிவித்து விட்டு, நிதி ஒதுக்காமல் இன்றைக்கு வரையில் ஏமாற்றி வருவதைப் போல அதுபோல, அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. தமிழகம் மிகப் பெரிய இரண்டு இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டது. 37 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு நாம் கேட்டோம். தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இதுவரை 276 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளார்கள். அது சட்டப்படி வரவேண்டிய தொகை. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், இரண்டு மூத்த மத்திய அமைச்சர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதியமைச்சர் என்று இருவரும் நேரடியாக பார்த்துவிட்டு சென்றார்கள். இப்படித்தான் தமிழக மக்களை பாஜக மதிக்கின்றதா என்பது தான் என்னுடைய கேள்வி.

தமிழகத்துக்கான எந்த சிறப்புத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. நமது கோரிக்கைகள் எதுவுமே இதில் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மத்திய பாஜக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைங்களையும் நிதி அமைச்சர் மறந்தே போய்விட்டார். தமிழ்நாடு என்ற சொல்லே நிதி நிலை அறிக்கையில் இல்லை என்று சொல்வதைவிட, மத்திய பாஜக ஆட்சியாளர்களின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும்தான் இந்த அறிக்கையில் இருக்கிறது. ஒரு நாட்டின் நிதி நிலை அறிக்கை என்பது அந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில், நிதி ஒதுக்கீட்டில் நீதி இல்லை. அநீதியே அதிகம் உள்ளது.

அரசியலை தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம். இப்போது இணைந்து நாட்டுக்காக பணியாற்றவேண்டும் என்று பிரதமர் நேற்றுதான் சொல்லியிருக்கிறார். அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. ஆனால், அவர் நேற்று சொன்னதற்கு எதிராக இன்றைக்கு அவருடைய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் நன்மைகள் செய்வதுதான் ஒரு சிறந்த அரசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படிதான் தமிழக அரசின் செயல்பாடுகளும் இருக்கிறது. இதை பார்த்தாவது, மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வருகின்ற 27-ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நானும் அதில் பங்கெடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேண்டாம் என்று நான் முடிவெடுத்திருக்கிறேன். அதைப் புறக்கணிக்கப் போகிறேன். தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே சரியானது என நினைக்கிறேன்.

தமிழகத்தின் தேவைகளை, உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளைய தினம் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் டெல்லியில் போராட்டம் நடத்தப் போகிறார்கள், அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கியிருக்கிறோம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இதைத் தொடர்ந்து, 40-க்கு 40 வெற்றிதான் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “தமிழக மக்கள் மீது அவ்வளவு ஆத்திரத்தில் இருக்கிறார்கள்” என்று முதல்வர் பதில் அளித்தார்.

தமிழகம் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தார் பிரதமர், அது பற்றி என்ற கேள்விக்கு, “தமிழ்நாடு மட்டுமா சொன்னார், திருக்குறளும் பிடிக்கும் என்று சொன்னாரே, திருக்குறள் என்று ஒரு வார்த்தை கூட கிடையாது, தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் கிடையாது,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதபோது, நிறைய திட்டங்கள் இருக்கிறது, மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் இருக்கிறது. தமிழக அரசு எப்படி கையாளும் என்ற கேள்விக்கு, “இதுவரைக்கும் எப்படி கையாண்டு கொண்டிருக்கிறோமோ, நாங்கள் அப்படியே கையாளுவோம்” என்று முதல்வர் பதில் அளித்தார்.

பத்திரப் பதிவு கட்டணங்களை மாநில அரசுகளுக்கு குறைத்திருக்கிறோம் என்று நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். அதுகுறித்த கேள்விக்கு, “நான்தான் ஒட்டுமொத்தமாக சொல்லிவிட்டேன். தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள். புறக்கணித்த காரணத்தினால் பிரதமர் கூட்டுகின்ற அனைத்து முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணிக்கப் போகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக, பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: “ இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பிஹார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.

அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்துக்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழக மக்களை பாதிக்கக்கூடியது.

சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த மத்திய வரவு-செலவுத் திட்டத்திலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழக அரசு சமர்ப்பித்த நிலையில், மத்திய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியதுதான். ஆனால், இன்று உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பிஹார் மாநிலத்துக்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மூன்றாண்டுகளுக்கும் முன்பாக மத்திய அரசு அறிவித்த நிலையிலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக எந்தவொரு நிதியும் இதுவரை வழங்கவில்லை. இது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் செயல்பாட்டினைப் பெரிதும் பாதித்து, சென்னை மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கென எந்தவொரு புதிய ரயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ இடம்பெறவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில், 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு வீட்டுக்கான மதிப்பீட்டினை உயர்த்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது, நகர்ப்புரப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளில், மத்திய அரசின் பங்கு 1.5 லட்சம் ரூபாயாகவும், இதில் மாநில அரசால் சுமார் 12-14 லட்சம் ரூபாய் ஒரு வீட்டுக்கு செலவிடப்படுகிறது. எனவே, மத்திய அரசின் பங்கினை உயர்த்தாமல், வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவே அமையும். திட்டத்துக்கு பிரதமரின் பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதுமானதல்ல. அதற்கேற்றால்போல நிதியும் வழங்கப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசு அறிவித்த முக்கியத் திட்டங்களைப் பார்க்கையில், நமது மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தின் நகல்போலத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக – ஆயிரம் தொழிற்பயிற்சி மையங்கள் மேம்பாட்டுத் திட்டம், பணிபுரியும் மகளிருக்கான (தோழி) விடுதிகள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், நீரேற்று புனல் மின் உற்பத்திக் கொள்கைகள் போன்றவை தமிழக அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் ஏற்கெனவே இடம்பெற்றவை. குறிப்பாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு, நாடு முழுவதும் 20 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சர் தன்னுடைய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களை நகல் எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், இரவல் வாங்கிப் பயன்படுத்தியவர், நன்றிக்கடனாக தமிழகத்துக்குப் பெரும் திட்டம் ஒன்றுகூட அறிவிக்காமல் விட்டது ஏன்? மத்திய அரசு, மாநிலப் பட்டியலில் உள்ள முத்திரைத்தாளின் கட்டணத்தைக் குறைக்குமாறு அறிவித்துள்ளது. எனினும் இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு எந்தவொரு அறிவிப்பும் இல்லை. எனவே, மத்திய அரசானது, முத்திரைத்தாள் கட்டணக் குறைப்பினை ஈடுசெய்வதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ஏற்பட்டுள்ள 20,000 கோடி ரூபாய் இழப்பிற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது, நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல், வெறும் பெயரளவிற்கு வருமானவரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாக வரிக்குறைப்பின்றி இருந்துவந்த நிலையில் வெறும் 17,500 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதும், இக்குறைப்புகூட புதிய வரிமுறையில் மட்டுமே செய்யப்பட்டு, பழைய முறையில் எவ்வித குறைப்பும் அளிக்கப்படாததும் மத்தியதரக் குடும்பங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மொத்தத்தில் தமிழகத்தின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்துக்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்துக்கு வழங்கிட வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave your comments here...