மக்களின் பேராதரவுடன் திமுகவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

அரசியல்

மக்களின் பேராதரவுடன் திமுகவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

மக்களின் பேராதரவுடன் திமுகவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், அவை நடவடிக்கைகள் குறித்தும், திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டும், கட்சியில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டியும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் வலிமையுடன் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்றத்தில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை நான் ஓய்வதில்லை.

தமிழ்நாடு அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பலன் தரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்தந்த துறை சார்பிலான மானியக் கோரிக்கைகளுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெற்றுள்ளது.

ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகள் தொடர்பான சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடைபெறும் இந்த வழக்கமான நடவடிக்கைகள் மட்டுமின்றி, இந்தக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிகழ்வுகள் நிறைவேறியும் பதிவாகியும் உள்ளன.

மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரின் செயலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் அனைத்தையும் ஆளுநர்களின் எதேச்சாதிகாரப் பிடியிலிருந்து மீட்டெடுக்கக் கூடிய பல முக்கிய அம்சங்களையும் தீர்ப்புரையில் தெரிவித்திருக்கிறது.

மாநில சுயாட்சித் தீர்மானத்தின் 51-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் மகத்தான தீர்ப்பு கிடைத்திருப்பதுடன், ஏப்ரல் 15 அன்று ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டேன்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அவர்களுக்கான நியமனப் பதவிகளை உருவாக்கும் வகையில் இரண்டு சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்வதற்கான சட்டமுன்வடிவையும் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது திமுக எப்போதுமே தனி அக்கறை கொண்ட இயக்கமாகும். அதனால், மாநில அரசின் சொந்த நிதி வருவாயினைப் பெருக்கி, அவர்களின் 9 முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேலும் பயன் கிடைக்கவேண்டிய தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளேன். இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன. ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டத்தைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளோம். தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாக இறுதி வரை உறுதியாக நிற்பேன்.

நம்முடைய இந்த உறுதியை சிறு சிறு சலசலப்புகளால் குலைத்துவிட முடியுமா என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து பார்த்தனர். சட்டம் – ஒழுங்கு தொடர்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள், தனி மனித விரோதங்களால் ஏற்பட்ட பழிக்குப்பழிகள் இவற்றை முதன்மை எதிர்க்கட்சியும் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் பூதாகரமான பிரச்சினையைப் போல காட்ட முயன்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க நினைத்தாலும், அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமான பதில்கள் பேரவையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன.

சட்டமன்றம் என்பது சத்தமன்றம் அல்ல. ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், எதிர்க்கட்சியினராக இருந்தாலும், தோழமைக் கட்சியினரும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனுக்கான ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்கின்ற இடமாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் நான் அக்கறையுடன் இருக்கிறேன். இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் அந்த நிலை கடைப்பிடிக்கப்பட்டது.

ஏப்ரல் 29 அன்று நிறைவடைந்த சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வராதததால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் கை குலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.

நம்மில் யாரேனும் நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுக்கவும் தயங்குவதில்லை. இது நம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களிடம் நாம் வெளிப்படுத்தும் பொறுப்புணர்வு. ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள். நாம் அவர்களின் சேவகர்கள். நம் ஆட்சியின் மகத்தான திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பயன் தந்திருப்பதால், எதிர்க்கட்சியினர் பொறாமையுடன் விமர்சிப்பது போல, நாம் தமிழ்நாட்டின் குடும்பக் கட்சியாகத் திகழ்கிறோம். அதனால்தான் சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவு பெற்ற நாளில், 7-ஆவது முறையாகத் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றும், திராவிட மாடல் அரசின் ‘version 2.0 loading’ என்றும் உறுதியாகத் தெரிவித்தேன்.

ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். “மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் ஒன்றிய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்” என்று.

திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். திமுக என்பது தமிழ்நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! மக்களின் பேராதரவுடன் திமுகவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும். இவ்வாறு ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...