27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி -புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா..!

உள்ளூர் செய்திகள்

27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி -புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா..!

27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி -புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா..!

டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்பு பாஜக 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அதன்படி, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர். அந்த வரிசையில் ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு: முதல்வர் ரேகாவுடன், பாஜக எம்எல்ஏக்களான பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங் மற்றும் ரவிந்தர் இந்த்ராஜ் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பர்வேஷ் சாகிப் சிங் வர்மா: டெல்லி அரசியலில் முக்கியமான ஜாட் சமூக பிரதிநிதியாக பர்வேஷ் வர்மா அறியப்படுகிறார். சமீபத்திய டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்பு, மிகவும் முக்கியமான நபராக மாறினார். முதல்வர் பதவிக்கான போட்டியில் அவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கடந்த 2014 – 2024 வரை பர்வேஷ் மேற்கு டெல்லியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். தற்போது பேரவைத் தேர்தலில் வென்று டெல்லி கேபினட் அமைச்சராகியுள்ளார்.

கபில் மிஸ்ரா: டெல்லி பேரவைத் தேர்தலில் கரவால் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மனோஜ் குமார் தியாகியை 23,355 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் கபில் மிஸ்ரா. கடந்த 2015 தேர்தலில் இதே தொகுதியில் மிஸ்ரா ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சரவையில் டெல்லி அரசின் நீர்வளத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா இருந்தார். தனது சக அமைச்சரான சத்யேந்தர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மஞ்சிந்தர் சிங் சிர்சா: பாஜகவின் மஞ்சிந்தர் சிங் சிர்சா டெல்லி பேரவைத் தேர்தலில் ராஜவுரி கார்டன் தொகுதியில் வெற்றி பெற்று தனது மறுவருகையை பதிவு செய்துள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தன்வதி சந்தேலாவை சுமார் 18,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 2020 தேர்தலில் அவர் இதே தொகுதியை சந்தேலாவிடம் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்து.

ஆஷிஷ் சூட்: டெல்லி முதல்வர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஆஷிஷ் சூடும் ஒருவர். டெல்லி அரசியலில் மிகவும் பிரபலமான ஆஷிஷ், இந்தப் பேரவைத் தேர்தலில் ஜானக்பூரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பர்வீன் குமாரை 18,766 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்திருந்தார். இவர் பாஜகவின் ஜம்மு காஷ்மீரின் இணை பொறுப்பாளராவார்.

பங்கஜ் குமார் சிங்: முன்னாள் டெல்லி மாநகராட்சி (எம்சிடி) ராஜா மோகன் சிங்-ன் மகனான பங்கஜ் குமார் சிங் வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார். அடிப்படையில் பல் மருத்துவரான இவர் டெல்லி மாநகராட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். முதல் முறை எம்எல்ஏவான பங்கஜ் குமார் சிங், விகாஸ்புரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மஹிந்தர் யாதவை 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

ரவிந்தர் இந்த்ராஜ் சிங்: டெல்லி பாஜகவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரவிந்தர் இந்த்ராஜ் சிங் பாவ்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெய் பகவான் உப்கரை 31,000 வாக்குகளில் வென்றிருந்தார். பாஜகவின் பட்டியலின மோர்சாவின் உறுப்பினரான ரவிந்தர் நீண்ட காலமாக பட்டியல் சமூகத்துக்காக பணியாற்றி வருகிறார்.

யார் இந்த ரேகா குப்தா?

ரேகா குப்தா 1974-ஆம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள நந்தகர் எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை வங்கி அதிகாரியாக இருந்தவராவார். 1976-ல் ரேகா குப்தாவின் குடும்பத்தினர் டெல்லிக்கு பெயர்ந்துவிட்டனர். அன்றிலிருந்தே அவர் டெல்லிவாசிதான்.

டெல்லி பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது ரேகா குப்தால் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினரானார். பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவிலும் இணைந்தார். அரசியலில் ஆரம்பகாலம் தொட்டே அவர் கொண்டிருந்த ஈடுபாடுதான் அவரை டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட உந்தியுள்ளது.

1996-1997 காலக்கட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்தார் ரேகா குப்தா. தியாள் சிங் கல்லூரியின் செயலராகவும் இருந்தவர். மாணவர்களின் குரலாக பல்வேறு தருணங்களில் அவர் ஒலித்தார். அது அவரை பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள உதவியதாகத் தெரிகிறது.

ரேகா குப்தாவின் தீவிர அரசியல் பயணம் 2000-ம் ஆண்டில்தான் தொடங்கியது எனலாம். அந்த ஆண்டுதான் அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பில் சேர்ந்து அதன் டெல்லி பிரிவு செயலாளராக பணியாற்றினார். அங்கே அவருடைய தலைமைப் பண்பு துரித கவனம் பெற்றது. அதன் நீட்சியாக அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை அவர் 2004 முதல் 2006-ம் ஆண்டு வரை அலங்கரித்தார். அங்கே அவர் காட்டிய வலுவான நிர்வாகத் திறன்களும், கட்சியின் மீதான அவரின் அர்ப்பணிப்பும் அடுத்தடுத்த உயரங்களை அவரை எட்டச் செய்தது.

2007-ஆம் ஆண்டு அவர் டெல்லி முனிசிபல் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டார். வடக்கு பிதாம்புரா தொகுதியில் போட்டியிட்டு கவுன்சிலரானார். 2007 முதல் 2009 வரை டெல்லி முனிசிபல் கவுன்சிலில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டியின் தலைவராக இருந்தார். இவை தவிர டெல்லி பாஜக மகளிர் அணியின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பதவிகளையும் பெற்றார்.

இப்போது டெல்லியில் பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 46 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைக்கிறது. டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர்.50 வயதாகும் ரேகா குப்தா முதன்முறை எம்.எல்.ஏ ஆவார். டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்கவுள்ள அவர் தனது எக்ஸ் பக்கத்தில் 

“எனது பொறுப்புணர்வின் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு முதல்வர் பதவியை வழங்கியுள்ள கட்சித் தலைமைக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். என் மீதான கட்சியின் நம்பிக்கையும், எனக்கு கட்சி தரும் ஆதரவும் எனக்கு புதிய சக்தியையும், உத்வேகத்தையும் தருகிறது.

நான் பூரண நேர்மையோடும், அர்ப்பணிப்போடும், ஒருமைப்பாட்டைப் பேணும் வகையில் கடமையாற்றுவேன். டெல்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காக, அவர்களுக்கான அதிகாரத்தை அளிப்பதற்காக, ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக செயல்படுவேன். டெல்லியை புதிய உச்சங்களை நோக்கிக் கொண்டு செல்லும் இந்த முக்கிய வாய்ப்பை முழு அர்ப்பணிப்போடு பயன்படுத்திக் கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார் ரேகா குப்தா.

Leave your comments here...