அனைத்து முஸ்லிம் நாடுகளும் பாதுகாப்புக்காக ஒன்றுபட வேண்டும்.. இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது – அயதுல்லா அலி காமெனி

உலகம்

அனைத்து முஸ்லிம் நாடுகளும் பாதுகாப்புக்காக ஒன்றுபட வேண்டும்.. இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது – அயதுல்லா அலி காமெனி

அனைத்து முஸ்லிம் நாடுகளும் பாதுகாப்புக்காக ஒன்றுபட வேண்டும்.. இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது – அயதுல்லா அலி காமெனி

ஆப்கானிஸ்தானில் இருந்து ஏமன் வரை, ஈரானில் இருந்து காசா மற்றும் லெபனான் வரை முஸ்லிம் நாடுகள் தற்காப்புக்காக தயாராக வேண்டும் என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி இன்று (வெள்ளிக்கிழமை) அரிதான உரையாற்றினார்.

அப்போது அவர், “இந்த பிராந்தியத்தில் இருந்து மேற்கு நாடுகளுக்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நுழைவாயிலாக இஸ்ரேலை மாற்றும் நோக்கிலேயே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதற்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றன. ஆனால், நமது பிராந்தியத்தின் எதிர்ப்பு சக்தி, இஸ்ரேலுக்கு எதிராக பின்வாங்காது.

அனைத்து முஸ்லிம் நாடுகளும் பாதுகாப்புக்காக ஒன்றுபட வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து ஏமன் வரை, ஈரானில் இருந்து காசா மற்றும் லெபனான் வரை முஸ்லிம் நாடுகள் தற்காப்புக்காக தயாராக வேண்டும். இஸ்ரேலை எதிர்கொள்வதில் ஈரான் தாமதம் செய்யாது. அதேநேரத்தில், அது தனது கடமையை நிறைவேற்ற அவசரப்படாது. சில இரவுகளுக்கு முன்பு நமது ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை என்பது முற்றிலும் சட்டபூர்வமானது.

லெபனான் மற்றும் பாலஸ்தீன போராளிகள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் சிந்தும் ரத்தம், உங்கள் வலிமையை பலவீனப்படுத்தக் கூடாது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் தர்க்கரீதியிலானது மற்றும் சட்டபூர்வமானது. பாலஸ்தீனியர்கள் செய்தது சரியானது” என்று அயதுல்லா அலி காமெனி தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் முன்பு பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் உரை நிகழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, வியாழன் அன்று (அக்.3,) பெய்ரூட்டில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளின் தலைவரான முகமது ரஷீத் சகாபி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் வெள்ளிக்கிழமை (அக்.4) தெரிவித்தது. லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் துருப்புக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, இன்று (வெள்ளிக்கிழமை) தெற்கு லெபனானின் எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய துருப்புக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

அதேபோல், லெபனான் தலைநகரான பெய்ரூட், காசா மற்றும் வெஸ்ட் பேங்கில் கொடூரத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடந்த தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், 151 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

Leave your comments here...