தவெக முதல் மாநில மாநாட்டை நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

அரசியல்

தவெக முதல் மாநில மாநாட்டை நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

தவெக முதல் மாநில மாநாட்டை நடத்த  நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

தமிழக வெற்றிக்கழகத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ள நிலையில் முதல் மாநாட்டுக்காக அனுமதியையும் தமிழக போலீசார் வழங்கி உள்ளது, அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைபாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாநாடு நடத்த அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை காவல்துறை தவெக கட்சியினர் முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கு நேற்று முன்தினம் (செப். 6) விஜய் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனிடையே, காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதன்படி இந்த மாநாடு ஏற்கனவே அறிவித்த செப். 23-ம் தேதியில் மாற்றம் இன்றி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது.

இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.

தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மாநாடு அனுமதி..

கட்சியின் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கவனித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் மாநாட்டை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு காவல்துறை அனுமதி வேண்டி முறைப்படி விண்ணப்பமும் அளிக்கப்பட்டது.

கடந்த 28ம் தேதி மனு அளித்துள்ள நிலையில் காவல்துறை அனுமதிக்காக பல நெருக்கடிகளை த.வெ.க., சந்தித்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 21 கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களையும் காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டது. மாநாட்டுக்கு ஒரு புறம் இடைஞ்சல் தரவே இப்படி கேட்கப்படுவதாக கூறப்பட்டாலும் முறைப்படி உரிய விளக்கத்தையும் அளித்து விட்டதாகவும், மாநாடு நிச்சயம் நடைபெறும் என்றும் புஸ்சி ஆனந்த் அறிவித்திருந்தார்.

அவரின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் தெம்பை ஏற்படுத்தி இருந்தாலும், முறையான அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் த.வெ.க.,வை அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் கட்சி மாநாட்டுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியையும் போலீசார் வழங்கி உள்ளனர். ஒரே நாளில் இரண்டு சூப்பர் அறிவிப்புகள் த.வெ.க., முகாமை கொண்டாட வைத்திருக்கிறது.

மாநாடு நடக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த வேண்டும். குழந்தைகள், பெரியவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறை த.வெ.க மாநாட்டுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

Leave your comments here...